கோத்தாரி நினைவுகள் -2

கோத்தாரி அனுபவங்கள் பகுதி 2

மறுநாள்..
குதிரைக்கொம்பு…?

பிரின்சிபால் அறைக்குள் இருந்து வெள்ளை சட்டை மடிப்பு களையாமல் வெளியில் வந்தார் பால சுப்பிரமணி  சார்….

அவர்தான் கோத்தாரி  பாலிடெக்னிக் மேலாளர்.

 சார்.. 375 ஆ.. சான்சே இல்லை சார். இந்த மார்க்குக்கு சத்தியமா DMTMR லாம் கிடைக்கவே கிடைக்காது.

பௌன்டரி.. சேக்கிறீங்களா சொல்லுங்க…

இல்லைனா.. சிவில்

அவர் சிவில்,,, சிவில்… என சொல்லி எங்க DMTMR கனவின் செவுலில் அடித்தார்.

மேலும் முனியாண்டி விலாஸ் விலைப்பட்டியல் போல ரேட்டையும் சொன்னார்.

DMTMR – 40 ஆயிரம்

FOUNDRY – 30  ஆயிரம்

CIVIL – 20 ஆயிரம்.

RTO வை பார்த்த ஆட்டோகாரன் போல அப்பா திரு.. திரு.. வென விழிக்க ஆரம்பித்துவிட்டார்.

என்னிடம் திரும்பி.. “டேய் என்னடா என்றார்?”

எப்பவுமே தமிழனுக்கு விலை அதிகமானதுதான ஒசத்தி.

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக DMTMR  என்றேன்.

அப்பா வேதாளமாக மீண்டும் பாலசுப்பிரமணி தோளில் ஏறினார்.

அந்த வரண்டாவில்  “ சந்துலால் கோத்தாரி”  மற்றும் “மோதிலால் கோத்தாரி” என்ற இரண்டு சேட்டுகள் படம் மாட்டிய சட்டங்களுக்குள் இருந்து சிரித்தனர்.

தமிழகத்தில் சேட்டுகள் போடுவதுதானே சட்டம். .  பல  மதுபான நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்த கெமிக்கல் கம்பெனி ஓனர் கோத்தாரிகளின் படம் அது.

அவர்கள் நடத்தும் அறக்கட்டளை உதவியுடன்தான் இந்த  கல்வி நிறுவனம் இயங்குகிறது என்பதை அறிந்தேன்.

ஓ… அப்போ இந்த கோத்தாரிதான் “படிக்கவும் வைக்கிறார், குடிக்கவும் வைக்கிறாரா?” என்ற தெளிவு பிறந்தது.

 விண்ணப்பம் வாங்கி சேர்க்கை நடைபெறும் அந்த காலகட்டத்தில் அப்படி ஒன்றும் சட்டம் ஒழுங்கு சல்லிசாக இல்லை.

 ஜெ. காவிரிப் பிரச்சனைக்காக கடற்கரை சாலையில் உண்ணாவிரதம் இருக்க … வந்தது பிரச்சினை.

 அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு   ஏனோ தானோ என ஓடிக்கொண்டிருந்த ஒற்றைப் பேருந்து கலைவாணியும் ஓரங்கட்டப் பட்டு இருந்தது.


மிக அழகாக கல்வி நிலையங்களை வடிவமைத்த அந்த கோத்தாரி தலைமுறைக்கு நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.

ஓயாமல் வீசும் காற்று,

 கண்கள் நிறைந்த பசுமை,

ஒவ்வொரு சிமென்ட் திட்டுக்கும் குடை பிடித்த மரங்கள்,

கடல் போல் எப்போதும் காட்சி அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய பகுதி என ரம்யமாக இருந்தது.

காற்று வந்து அமைதி கெடுத்தாலும் பாப்பாஞ்சத்திரம் நோக்கி செல்லும்  சரக்கு லாரியின் டயர் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

முக்கியமாக கோத்தாரி அலுவலக முதன்மை கட்டிடத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். கோத்தாரிக்கு வருவோருக்கு விண்ணப்பம் கிடைக்கிறதோ, சீட் கிடைக்கிறதோ இல்லையோ.

அங்கே வருவோருக்கு நிச்சயமாக “குளிர்ந்த குடிநீர்” கிடைக்கும்.  Post Diploma  மாணவர்கள் கைங்கரியத்தில் அங்கே குளிர் பதன சாதனம் இயங்கும்.  எந்த வாத்தியார் திட்டினாலும் கோத்தாரி மாணவர்களுக்கு அந்த “சில்” வாட்டர் ஆறுதல் அளித்துக் கொண்டே இருந்தது.

அப்பா எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும் என முனைப்பாக இருந்தார்.
சார் நான் Rural Welfare Officer  ஆக BDO officeல் வேலை செய்கிறேன். என்று தமது பதவியை சொல்லி கேட்டுப்பார்த்தார்.

அதற்கு பதில் … ”அதோ.. BDO  ஓவே வந்திருக்கார் பாருங்க.. அவருக்கும் அதே பதில்தான்”
விரல் நீட்டிய திசை நோக்கிப் பார்க்கிறேன்.

நம்ம ரியாஸ் அகமதுவுக்கு  Recomatation லெட்டரோடு  பூந்தமல்லி BDO நிற்கிறார்.

“சாமியே சைக்கிள்ள போகுது.. பூசாரி புல்லட் கேட்கிறாரு என்கிற கதையாக கண்ணாடி அணிந்திருந்த பாலசுப்பிரமணியம் சார் தமது பெக்ஸ்சை தாண்டி மீண்டும் எங்களைப் பார்த்தார்.


உண்மைய சொல்லி ஒரு சீட் வாங்க எங்கப்பா என்ன மாணிக் பாஷாவா?  ம்… எவ்வளவு பேசியும் ஒண்ணும் நடக்கல.  நாட்கள் நகர்ந்தன.

இப்போதும் புங்க மரத்தடியில்  போட்டியில் இருப்பது இருவர்தான். ஒன்னு நானு மற்றொன்று பாரிவாக்கம் சந்திரசேகர்.

சந்திரசேகர் அப்பாவை பார்க்கும் போது திட்டவட்டமாக எப்படியும் தன் மகனுக்கு சீட் வாங்கிவிடுவார் என தெரிந்தது எங்கள் மனதில் இன்னும் கிலியேற்றியது.

யாரு  எப்படி முட்டி மோதி ஜெயிச்சோம்னு  நினைக்கிறீங்க.. ..

நெனச்சுகிட்டே இருங்க… வரேன்..
(தொடரும்….) # சிவதி CMKTI

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments