துப்பு கெட்ட பொழப்பு....

காட்சி 1.

ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்யும் ஒரு வாலிபனை ஒரு பெண் ' த்தூ.. ஏன்டா நீயெல்லாம் மனுஷனாடா.. அக்கா தங்கச்சிக்கூட பொறக்கல... நீ நல்லா இருப்பியா... கட்டையில போக.. என அவன் முகத்தில் காரி முழிகிறாள்... பேருந்தில் உள்ள பயணிகள் எல்லோரும் அந்த இளைஞனை வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள்...

காட்சி 2.

கிரிக்கெட் போட்டி ... ஜாகிர்கான் அந்த மினு மினுப்பான பந்தை, புளிச்.. புளிச் என்று துப்பி மேலும் பளபளக்க வைக்கிறார். ஓடிவந்து உற்சாகமாக வீசுகிறார்... ஆஸ்ரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மிடில் ஸ்டம்ப் எகிர்கிறது. ஸ்டேடியமே எழுந்து நின்று ஜாகிர்கானை கைத்தட்டி ஆர்பரிக்கிறது.

காட்சி 3

ஒரு திரைப்படம்... கார் வேகமாக போகிறது. ரஜினி ஸ்டைலாக தலையைக்கோதிவிட்டு, மென்றுகொண்டிருந்த அந்த பான்பராக் எச்சிலை ஜன்னல் வழியாக துப்பாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்கதவை திறந்து சாலையால் துப்புகிறார். ரஜினி ஸ்டைலில் புல்லரித்துப்போன இரசிகர் கூட்டத்தால் தியேட்டர் அதிர்கிறது.

மூன்றுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்கலாம். மேலே துப்பும் எல்லொருக்கும் வெகுஜன அங்கிகாரம் கிடைக்கிறது. உலகில் மானங்கெட்டவருக்காக காரி உமிழும் பழக்கம் இல்லை. மாறாக அபராதம் கட்டவேண்டும்.

நின்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் ஓரமாக நடந்து செல்ல இஷ்ட தெய்வத்தின் அருளோ அல்லது குறைத்தபட்சம் ஒரு குடையோ உங்களுக்கு தேவைப்படலாம். தமது வீட்டைத்தவிர பொது இடத்தை கழிப்பிடமாக உபயோகிக்கும் மனோபாவம் நம்மிடையே வளர்ந்துவருகிறது. இது எவ்வளவு அருவேறுப்பானது என நீங்கள் உணரவேண்டுமானால் செருப்பில்லாமல் ஒரு நாள் மட்டும் தெருவில் நடந்து பாருங்கள் தெரியும்.


கடற்பகுதியில் சர்வ தேச எல்லையில் எச்சில் துப்புவர்களுக்கு ரூ.500 வரை, தண்டம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநராட்சி கூட பொது இடத்தில் துப்புவர்களுக்கு ரூ. 100 தண்டம் விதித்துள்ளது. (வசூல் செய்திருந்தால் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் கையேந்தும் சூழல் வந்திருக்காது). தமிழக அரசு பான்பராக், புகையிலை, பான் பீடா ஆகியவற்றிக்கு தடை விதித்துள்ளது. (ஆமாங்க உண்மைதான், சத்தியமா நம்புங்க..) ரூ.3க்கு விலையிடப்பட்ட பாக்கட்டுகள் உள்ளூர் வரி (போலிஸ் மாமுல்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்) 6 ரூபாய்க்கு அரசு அங்கிகாரம் பெற்ற, பெறாத அனைத்துக்கடைகளிலும கிடைக்கிறது. கொடுமைகண்டால் கொதித்து சிவப்பாக வேண்டிய சமூகம் பான்பராக் எச்சிலால் சிவந்து கிடக்கிறது.

ஆந்திர மாநிலம் பான் பொருட்களுக்கு தடையேதும் விதிக்கவில்லை. ஆனால் நக்சல் இயக்கம் வேரூன்றியிருக்கும் இடங்களில் பான் பொருட்கள் கடைகளில் கிடைப்பதில்லை. அதிசயம்தான். ஆனால் அக்மார்க் உண்மை. நக்சல் இயக்கங்கள் அங்கே பான் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பவர்கள் நக்சலுக்கு அடங்குகிறார்கள்.

எச்சிலை காலை உணவாக் எடுத்துக்கொள்ளும் ஈ, அதி நவீன நோயின் தீவிர கொள்கை பரப்பு செயலாளராக மாறி காலரா, காசநோய், சிக்குன் குனியா, மலேரியா ஆகியவற்றை எளிதாக பரப்புகிறது. மனித குலத்தின் தவறான செயலால் மனித குலம் அழகிறது.

எச்சில் இலை, எச்சில் உணவு, எச்சில் பையன் என்ற சொல் மூலம் எச்சிலுக்கு இரண்டாம் தரமான இடம்தான் தரப்படுகிறது. உண்மை என்னவேன்றால்... செயற்கை இரத்தம், செயற்கை மணல், செயற்கை இதயம், செயற்கை உறம் என புகுந்து விளையாடும் டெக்னாலஜி உலகம் திகைத்து நிற்பது செயற்கை எச்சில் எப்படி செய்வது என்பது குறித்துதான்.

ஆம், எச்சில் யாராலும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத அரிய பொருகள். சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், குளோரைடு, பைகார்பனேட், பாஸ்பேட் என கனிமச்சுரங்களின் அதிசயக்கலவை. அதில் உள்ள 'லிப்பேஸ்' செரிமானத்திற்கு உதவுகிறது. நாளொன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை எச்சில் எனப்படும் உமிழ்நீர் வாயில் சுரக்கிறது. எச்சில், உணவுபொருளில் உள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. ஆற்றல் மிகுந்த பேச்சாற்றல்கூட எச்சிலால்தான் ஏற்ற இறக்கத்தோடு அமைகிறது என்பது மற்றோர் சிறப்புச்செய்தி. அப்படிபட்ட செயற்கரிய பொருளைத்தான் வெளியில் துப்புகிறோம். வெட்கப்படவேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம்.

இன்று அழுது வீங்கி நாளை சாகப்போகிற சமூகத்திடம், அடுத்து வரப்போகிற தலைமுறை எனக்கு என்ன விட்டுசெலகிறீர்கள் என கேள்விகேட்கும் நிலை வரும். அப்போது மாசுபடாத பூமி என்ற பதில் இல்லையென்றால் அவர்களும் நம்மை நோக்கி காரி உமிழும் நிலை வரலாம்.

எதை தவிற்க போகிறீர்கள்? துப்பும் பழக்கத்தையா? அடுத்த தலைமுறை கேள்விகளையா?

- சென்னைத்தமிழன்.

4 comments:

த,அமலா said...

நன்பரே என்ன இது! துப்பு கெட்டவர்களை பார்த்து நன்றாக காரி துப்பி இருகிறீர்கள், பூமியை பார்த்து துப்புகிறவர்கள், அன்னார்ந்து பார்த்து துப்பினால் பூமி தாயின் துயரம் தெரியும் நன்றி சொல்கிறது நான் மட்டும் இல்லை என் வழியாக பூமி தாயியும் தான், அய்யா அருமை போங்க.

Bruno said...

//எச்சில் இலை, எச்சில் உணவு, எச்சில் பையன் என்ற சொல் மூலம் எச்சிலுக்கு இரண்டாம் தரமான இடம்தான் தரப்படுகிறது. உண்மை என்னவேன்றால்... செயற்கை இரத்தம், செயற்கை மணல், செயற்கை இதயம், செயற்கை உறம் என புகுந்து விளையாடும் டெக்னாலஜி உலகம் திகைத்து நிற்பது செயற்கை எச்சில் எப்படி செய்வது என்பது குறித்துதான்.//

அசத்தல்

சென்னைத்தமிழன் said...

தோழர். அமலா, தோழர். புருனோ அவர்கள் வருகைக்கு நன்றி!

கோகுல் said...

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_29.html

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments